Sunday, January 29, 2012

கரும்புலி முத்துகுமாருக்கு நினைவு மண்டபம்

‘விடுதலை நெருப்புக் களம்’தமிழக கரும்புலி நாளில் கரும்புலி முத்துகுமாருக்கு நினைவு மண்டபம்



கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி15,16,17,18 ஆகிய தேதிகளில் ஈழ விடுதலை போராட்டத்தின் ஒரு கட்டமாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து நான்கு நாட்களாக சென்னையை அடுத்த மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகத்தையே உசுப்பிய இந்த போராட்டத்தில் சென்னை கொளத்தூரில் வாழ்ந்த முத்துக்குமார் என்ற இளைஞனும் கலந்துக்கொண்டார். தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சை  அந்த நான்கு நாட்களும் மிகஆர்வமாக கேட்டவர் முத்துகுமார்.
ஜனவரி 29 ஆம் தேதி காலையில் சென்னையில் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் சாஸ்த்திரி பவனிற்கு சென்ற முத்துகுமார் தான் கையில் தட்டச்சு செய்து வைத்திருந்த 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளை அங்கிருந்த பொதுமக்களுக்கு கொடுத்தார். பின்னர் தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை தன் உடம்பில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை கண்டவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
காவல்துறையினர் வந்து உயிருக்கு போராடிய முத்துக்குமாரை அவசரஊர்தியில் ஏற்றி சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துகுமார் மருத்துவர்களிடம் “என் சாவை அண்ணன் பிரபாகரனிடமும் , அண்ணன் திருமாவளவனிடமும் தெரிவியுங்கள்”என சாகும் முன் கடைசியாக சொன்னார். முத்துகுமரனின் சாவு தமிழகத்தையே உசுப்பியது.
தொல்.திருமாவளவன் அவர்கள் ‘கரும்புலி முத்துகுமார் பாசறை’ யை தொடங்கி சங்கத்தமிழன் அவர்களை அப்பாசறைக்கு முதன்மை செயலாளராக நியமித்தார். முத்துகுமாரின் நினைவு நாளை ‘தமிழக கரும்புலிகள் நாள்’என அறிவித்து ஈழவிடுதலைக்காக உயிர்நீத்த அனைவருக்கும் அந்நாளில் விடுதலைச் சிறுத்தைகளால் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.    கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் கரும்புலி முத்துகுமார் பாசறையின் சார்பில் முத்துகுமாருக்கு அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் அருகே உள்ள கொலுவைநல்லூரில் இடம் வாங்கி அங்கே முத்துகுமாரின் வெண்கல சிலை நிறுவப்பட்டது.
 
தமிழக கரும்புலிகள் நாளான இன்று அந்த இடத்தில் கரும்புலி முத்துகுமார் பாசறையின் சார்பில் ‘விடுதலை நெருப்புக் களம்’ என்னும் நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கரும்புலி முத்துக்குமார் பாசறையின் முதன்மை செயலாளர் சங்கத்தமிழன் அடிக்கல்லை நாட்டினார். ‘விடுதலை நெருப்புக் களம்’ விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகளின் முதன்மை பொறுப்பாளர்கள் ஆற்றல்அரசு,வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், தமிழினியன், முரசுதமிழப்பன், முத்துகுமாரின் சித்தப்பா சிறுத்தை உதயகுமார், பாட்டி லிங்கபுஷ்பம் ஆகியோருடன் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகளும் கலந்துக்கொண்டனர்.   தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று மாநாட்டில் கலந்துக்கொள்ள மலேசியா சென்றுள்ளதால் தலைவரின் அறிவுறுத்தலின் முன்னணி பொறுப்பாளர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.

Wednesday, January 25, 2012

மொழிப்போர் தியாகிகள் தினம்


மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று (25.12.2012) விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். வடசென்னை மூலகொத்தளத்தில் அமைத்துள்ள  நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் திரண்டு வந்து தலைவருடன் பங்கேற்றனர்.
வீரவணக்க நிகழ்விற்கு பின்னர் நினைவிடத்திலேயே செய்தியாளர்கள் தலைவரை சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பின் திருநங்கைகள் தலைவரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் கபிலன்,வன்னிஅரசு,எழில்கரோலின் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Monday, January 23, 2012

பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்!


பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள்
நியமிக்கப்பட வேண்டும்!

உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு
வயது வரம்பைத் தளர்த்த வேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கை!


தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணையிட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் மனமார வரவேற்கிறது. தமிழகமெங்கிலும் ஏறத்தாழ 25,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கான படிப்பை முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். 50 வயதைக் கடந்த நிலையிலும் வேலைவாய்ப்பின்றி பெரும்பாலானோர் அல்லலுற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது தகுதித் தேர்வு, மற்றும் போட்டித் தேர்வு ஆகிய இரட்டைத் தேர்வு முறையின்படி பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதால் நீண்டகாலமாக காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் நிலை உருவாகும் என அவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதைப் போல தற்போதும் நியமனம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அதாவது இரட்டைத் தேர்வு முறையை கைவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையிலேயே, போட்டித் தேர்வின் மூலம் மட்டுமே அப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

அடுத்து, உரிமையியல் நீதிமன்றங்களில் 185 பணியிடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுகள் நடத்திட தமிழக அரசு அறிவிப்புச் செய்துள்ளது. அவ்வறிவிப்பில் தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பொது வகையறா மாணவர்களுக்கு 35 ஆண்டுகள் என்றும், இடஒதுக்கீட்டு வகையறாவைச் சார்ந்தவர்களுக்கு 40 ஆண்டுகள் என்றும் வயது வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு வகையறாவில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகிய அனைவரும் இடம்பெறுகின்றனர். வழக்கமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோரிலிருந்து கூடுதலாக வயது வரம்பு தளர்த்தப்படும். அதாவது, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோருக்கான வயது வரம்பும், பிற பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பும் ஒரே அளவாக இல்லாமல், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினரின் வயது வரம்பு சற்றுக் கூடுதலாகவே அல்லது ஐந்து ஆண்டுகள் கூடுதலாகவே தளர்த்தப்படும். உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான வயது வரம்பு பிற பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்புக்கு இணையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான வயது வரம்பை 40லிருந்து 45 ஆண்டுகளாகத் தளர்வு செய்து அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது!

இவண்
(தொல். திருமாவளவன்)

Sunday, January 22, 2012

தொல்.திருமாவளவனுடன் அமீரகத் தோழர்கள் சந்திப்பு

கடந்த 14 ஆம் தேதி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் துபாய் சென்றார். துபாய் விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பாக தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் துபாய் விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் சங்கத்தமிழன், ஜான், முத்தமிழ்வளவன், பட்டினம் மணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

15 ஆம் தேதி டென்ஸ்போர்ட்ஸ், கைராளி ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பார்வையிட்டார். கைராளி தொலைக்காட்சியில் செய்தியாளர்களை சந்தித்தவர் முல்லை பெரியாறு பிரச்னையை குறிப்பிட்டு பேசினார். பின்னர் அங்குள்ள தமிழர்களின் இல்லத்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.

16 ஆம் தேதி துபாயில் உள்ள காயிதேமில்லத் பேரவை சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு ஏராளமானோர் திரண்டு வந்து தலைவரின் உரையை ஆர்வத்துடன் கேட்டனர்.

18 ஆம் தேதி தொல்.திருமாவளவன் அவர்கள் உலகத்திலேயே உயரமான கட்டிமான புர்ஜ்-அல்-அரப் என்கிற கட்டிடத்தை பார்வையிட்டார். அங்கும் அவரை தமிழர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர் அன்று இரவு துபாய் விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டம் தலைவர் தலைமையில் சிவிஸ் ஸ்டார் பவன் என்ற இடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துபாய் விடுதலைச்சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் சங்கத்தமிழன், கோபாலகிருஷ்ணன், பட்டினம் மணி ஆகியோருடன் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கலந்துக்கொண்டனர்.

***

துபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 16.01.2012 திங்கட்கிழமை மாலை லோட்டஸ் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 



அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் உள்ளிட்டோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு மலர் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

ஏற்புரை நிகழ்த்திய திருமாவளவன் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்துக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் வருகை புரிந்த போது அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தினை நினைவு கூர்ந்தார். 


மேலும் சிறுபான்மை மக்களுடன் தனக்குள்ள இணக்கமான நட்பினை விவரித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழக எம்பிக்கள் குழு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வருகை புரியவேண்டியதன் அவசியம் குறித்தும் வளைகுடாத் தமிழர்களின்  நிலை குறித்து அறிய வேண்டியதையும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் எடுத்துரைத்ததை ஆமோதித்து அது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நிகழ்வில்  விடுதலைச் சிறுத்தைஅக்துபாய் லேண்ட்மார்க் ஹோட்டல் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, அஜ்மான் ஆரிஃபின் குழும மேலாணமை இயக்குநர் ஆரிஃப், ஈமான் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, தேரா டிராவல்ஸ் மேலாளார் ஹாஜா முஹைதீன், அஜ்மான் ஹமீது, அம்மாபட்டிணம் அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், அப்துல்லாஹ் மற்றும் பலர் பங்கேற்றனர். 
 
 
 
****

தொல்.திருமாவளவனுடன் அமீரகத் தோழர்கள் சந்திப்பு


- குத்தாலம் அசரப்அலி
 
அமீரகத்தில் நான்கு தினங்கள் சுற்றுப் பயணமாக ஊடகத்துறையை தங்களுக்கென அமைத்துக் கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வருகைப் புரிந்திருந்தார்.

தாய்மண் வாசகர் வட்டத்தின் சார்பாக அவருக்கு துபாய் கராமாவில் உள்ள சுவிஸ்ட் ஸ்டார்பவனில் 18/1/2012 அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்நிகழ்சிக்கு நண்பர் குத்தாலம் அசரப்அலி அவர்களுடன் சென்றிருந்தேன். தொல்.திருமாவளவனுடைய சொற்பொழிவை அதிகம் நான் கேட்டதில்லை. தலித்துக்கள் முன்னேற்றத்திற்காக சட்டம், சமூகம், அரசியல் என பாடுபடக்கூடிய செயல் வீரர் என்பதை அறிந்திருக்கிறேன்.

பல அமைப்புகளிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கம் ஏழு மணி என்று அழைப்பு கொடுத்திருந்தனர்; ஆனால் ஏழு மணிக்கு பலர் வரவில்லை சொன்ன நேரத்திற்கு திருமாவளவன் வந்துள்ளார்; ஆனால் ஆட்கள் வராததினால் அரை மணி நேரத்திற்குள் மற்றொரு வேலையை முடித்து விட்டு வந்துவிட்டார் திருமா. நேரத்தின் மீது அவர் கொண்டிருக்கும் பேணுதலை அறிய முடிந்தது.

அதே போன்று மேடையில் அமரும்போது தனது கட்சிக்காரர்களை மட்டும் அமரச் செய்யாமல் தன்னுடன் குத்தாலம் அசரப்அலியையும் அமர வைத்து இஸ்லாமிய சகோதரர்களுடன் நாங்கள் சமத்துவமாக சகோதரத்துமாக நட்புத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை அவர் வாய்வழி சொல்லாமல் நிலைநாட்டினார்.

தொல்.திருமாவளவனின் உரை மனம் திறந்த மடலாகவே இருந்தது. வளைகுடாவில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகள் மற்றும் நலனுக்காக எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோருடன் பேசி இருப்பதாக கூறினார். சவூதி அரேபியா ஜித்தாவில் பாதிக்கப்பட்ட 200 க்கும் அதிகமான தமிழர்களை மீட்பதற்கு முயற்சி எடுத்து மீட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.

என்னோடு S.M.பாரூக் மற்றும் ஹனீபா

இந்திய ஊடகங்கள் எங்கள் கட்சிகளின் நலப் பணிகளை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்ல மறுக்கிறது காரணம் நாங்கள் தலீத் என்பதற்காகவா? தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம் ஊர்களில் நான்கு தினங்கள் முகாமிட்டு ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, நேரடியாக பாதிப்புகளை கண்டு உரிய நிவாரணங்கள் பெறுவதற்கு போராடி இருக்கிறோம் இதை எந்த ஊடகம் செய்தியில் வெளியிட்டது? ஒரு பண்டிகையின் காலத்திலும் கூட வாழ்த்துச் செய்தியை பத்திரிக்கைகாரர்களை அழைத்து சொல்லும்போதும் கூட அனைவரும் அந்த செய்தியை வெளியிடுவதில்லை இருட்டடிப்பு செய்கிறார்கள்.

திருவாரூர் செல்லும் வழியில் ஒரு பத்து நிமிடங்கள் காரை நிறுத்தி காரிலிருந்தவாறு புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் கை அசைத்த தலைவரின் காட்சியை நாள் முழுவதும் அவர்களின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

நேற்று வந்த கட்சிகளின் செய்திகளை முதல் பக்கத்தில் முதல் வரியில் போடக்கூடிய ஊடகங்கள் அவர்களுக்கு முன்பிருந்தே இயங்கக் கூடிய எங்கள் கட்சி செய்திகளை இரண்டாம் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? (ஒரு சீனியாரிட்டி கிடையாதா?)

கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என பல முறை கலைஞரிடம் மனு கொடுத்துள்ளேன் ஆனால் இன்று வரையில் அதை நிறைவேற்ற வில்லை ஆனால் எங்கள் விடுதலை சிறுத்தை அமைப்பு சார்பாக நான்கு ஆண்டுகளாக கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு விருது வழங்கி வருகிறோம். அதுமட்டுமல்ல ஆண்டுதோறும் நோன்புக் காலங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்கு பல கட்சிக்காரர்களை அழைப்பார்கள் ஆனால் நாள் முழுவதும் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் என்று இஸ்லாமியர்களுடன் தங்களுக்கு இருக்கும் இணக்கத்தை சொல்லிக் காண்பித்தார்.

தமிழர்களிடம் ஒற்றுமை என்பது இல்லை; முல்லை பெரியார் விசயத்தில் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர்களிடம் உள்ள ஒற்றுமை, 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர்களிடம் இல்லை. முல்லை பெரியார் விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த கருத்தை பிரதமரிடம் வலியுறுத்துவதற்கு தனித்தனியே செல்கிறார்கள் எல்லா கட்சிகளும் ஒன்றாக செல்லலாம் என அழைத்தால் யாரும் முன்வரவில்லை என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையைப் பற்றி கேட்டபோது நாங்கள் அணு சக்திக்கு எதிரானவர்கள் ஆனால் மின் சக்திக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறினார்.

ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலையை 2020 க்குள் மூடப்போவதாக செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் ஏன் மூடவேண்டும்? அணு உலையின் கழிவுவை 15ஆயிரம் ஆண்டுகள் வரை பாதுகாக்க வேண்டுமாம். இல்லையெனில் மிகப்பெரிய ஆபத்துகள் மனித இனத்திற்கு இருக்கிறது. இன்று நாம் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்கா வரக்கூடிய புதிய முறையினருக்கு மிகப்பெரிய ஆபத்தை கொடுத்துவிட்டு போக வேண்டுமா? மின் சக்தி தயாரிப்பதற்கு மாற்று வழிகள் எவ்வளவோ இருக்கிறது காற்றாலை, சூரிய வெப்பத்திலிருந்தும் தயாரிக்கலாம்.

அணு உலையின் மூலம் கிடைக்கக் கூடிய பலன் வெறும் இரண்டரை சதவீதம் மட்டுமே? அணு உலையின் மூலம் அணு குண்டகள் தயாரிப்பதற்காக அணு உலைகளை அரசுகள் பயன்படுத்துகின்றன.

எப்படி இருந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் அரசு செயல்படுத்தும். இந்த அணு மின் நிலையத்தை முதலில் கேரளா கொச்சியில் போடுவதற்கு இடமெல்லாம் தேர்வு செய்து முடிவானது ஆனால் கேரள மக்கள் அதை எதிர்க்கவே தமிழகத்தில் கூடங்குளத்தை தேர்வு செய்தார்கள். அப்போது அதை பத்து பேர்கள் கொண்ட ஒரு குழு மட்டுமே எதிர்த்தார்கள். வேறு யாரும் எதிர்க்கவில்லை. இன்று பலரும் எதிர்பதற்கு காரணம் அதில் அரசியலும் இருக்கிறது வியாபாரமும் இருக்கிறது.

ரஷ்யாவுடன் உள்ள அணுமின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு இத்தாலியுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. என்று வெளிப்படையாக பேசினார்.

ஈழத்தமிழர்களின் கேள்விகளும் கேட்டார்கள். தமிழ் மற்றும் தமிழ் தேசியம் இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவுப் படுத்தினார்.

குத்தாலம் அசரப்அலி

இந்நிகழ்ச்சியின் இறுதியில் குத்தாலம் அசரப்அலி பேசுகையில் கேரளர்களிடம் ஒற்றுமை இருந்ததினால் அணுமின் நிலையம் அங்குவரவில்லை தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாததினால் கூடங்குளம் இன்று பிரச்சனையாக இருக்கிறது என்று கூறினார்.

ஒரு அரசியல் தலைவரை பார்த்த திருப்பதியை விட ஒரு மனித நேயமிக்க மனிதரை சந்தித்த திருப்தியுடன் நன்றியுரையைக் கேட்களாளேன்.
----

Friday, January 20, 2012

நாகூர் நகர செயலாளர் தோழர் ரங்கையன்,சாதி இந்துக்களால் படுகொலை


17.01.2012 விடுதலைச் சிறுத்தைகளின் நாகூர் நகர செயலாளர் தோழர்  ரங்கையன்,சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டார்.தோழர் ரங்கையன் நாகூர் பகுதிகளில் பல காலமாக சாதி இந்துக்களை எதிர்த்து தலித் மக்களுக்கு அரணாக இருந்து வந்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாளன்று நாகூரில் முதன்முதலாக புரட்சியாளரின் சிலையை அண்ணன் திருமா முன் திறக்க அறிவித்திருந்தார்..இதுவும் இக்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது ...இவருக்கு முன் நகர செயலாளராக இருந்த தோழரும் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...இவர் மீது கடந்த வருடம் நவம்பர் மாதம் நீதிமன்ற வளாகத்திலேயே கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது .காவல் துறையில் புகார் செய்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்...

நேற்றைய(17.01.2012) படுகொலை காரைக்காலில் நடந்துள்ளது...தலை முழுதும் சம்பட்டியால் அடித்து சிதைக்கப்பட்டுள்ளது...இது வரை காவல் துறையினர் யாரையும் கைது செய்யவில்லை ..சாதி இந்துக்களுக்கு ஆதாரவான போக்கே கடைபிடிக்கப்பட்டு வருகிறது ..நாகூர் பகுதி முழுவது கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவி வருகிறது .

சாதி ஒழிப்பு மற்றும் தமிழ் தேசிய களத்தில் தொடர்ந்து போராடிய சாதி ஒழிப்பு போராளி  தோழர் ரங்கையனுக்கு வீரவணக்கம் ! வீரவணக்கம் !!கண்டனம் கூட தெரிவிக்காத தமிழ் தேசியவாதிகளே ,மனித உரிமை ஆர்வலர்களே எங்கே? எங்கே?

- பாலசிங்கம்

தோழர் ரங்கையனின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான சிறுத்தைகள் அஞ்சலி செலுத்தினர்


Thursday, January 19, 2012

தமிழகத்தில் நடப்பது சண்டிராணி ஜெயலலிதா அரசா? மலையாள வெறியன் உம்மன்சாண்டி அரசா?



அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  கழுத்தை நெறித்துக் கொலை செய்வதைப்  படித்திருப்போம். ஆனால் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கொலை செய்யப்படுவதை இப்போதுதான் தமிழகம் கேள்விப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர்  சாந்தவேல்.  மனைவி சித்ரா, பெண் குழந்தைகள் தட்சனா, சஞ்சனாவுடன் தானுண்டு, தனது பிளம்பர் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை சென்று அய்யப்பனை வழிபடுவதையும் மற்றொரு முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார். 

வழக்கம் போல, கடந்த 6-1-2012 அன்று முகப்பேரில் உள்ள சந்திரசாமி என்கிற மலையாளி (இவர்தான் போன குழுவிற்கு குரு சாமி) தலைமையில் சாந்தவேல் உள்பட 80 பேர் சபரி மலைக்குப் பயணமானார்கள்.  போனவர்களிடமிருந்து சாந்தவேல் மனைவி சித்ராவுக்கு ஒரு தொலைபேசி வந்தது.  அதில் சாந்தவேல் மிக சீரியசாக கோட்டயம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வருகிறது.  அதிர்ச்சியடைந்த சித்ரா, தனது அக்காள் உண்ணாமலையையும் கணவர் வழி உறவினரான பலராமனையும் அழைத்துக்கொண்டு கோட்டயம் விரைகிறார்.

அங்கே மருத்துவமனையில் சாந்தவேலுவைப் பார்த்தபோது, அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர் சாந்தா உள்ளிட்டோர்.  சாந்தவேலு உடலின் பின்பகுதி முழுவதும் வெந்துபோய் மிகவும் கோரமாக, கேட்பாரற்றுக் கிடந்துள்ளார்.

நடந்தது என்ன என்று விசாரித்தபோது, பம்பாவிலுள்ள ஒரு தேநீர்க் கடை  முன்பு சாந்தவேல் தமிழில் பேசினார் என்பதற்காகவே அக்கடை நடத்தும் மலையாளி, கொதித்துப்போய் சாந்தவேலுடன் சண்டைக்குப் போயுள்ளார். உடன் வந்தவர்கள் சமாதானப்படுத்திவிட்டுத் திரும்பும்போது, அந்த மலையாளி, பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை சாந்தவேலின் பின்பக்கம் ஊற்றி தனது மலையாள வெறியைத் தணித்துள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சாந்தவேலுவை சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லாமல் 15-1-2012 அன்று அதிகாலை 3 மணியளவில் மரணமடைந்துள்ளார்.  சாந்தவேல் உடல் திருவேற்காட்டிலுள்ள திருவேங்கடத்திற்கு கொண்டு செல்வதற்கே 16ந்தேதி மாலையாகிவிட்டது.

இச்செய்தியை பாவலரேறு பாசறையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாவேந்தன்  அனைத்துத் தமிழ் உணர்வாளர்களிடமும் கொண்டு செல்கிறார்.  செய்தியைக் கேள்விப்பட்டு சாந்தவேலு வீட்டிற்கு சென்ற காவல்துறை துணை ஆணையர்  ஐயப்பன் சாந்தவேலு குடும்பத்தினரை மிரட்டி உடனடியாக சாந்தவேலு உடலை அடக்கம் செய்ய வற்புறுத்துகிறார்.

17ந் தேதி தமிழுணர்வாளர்கள் திருவேற்காட்டை முற்றுகையிட ஆரம்பித்த பின்புதான் காவல்துறை ஒதுங்க ஆரம்பித்தது.

18-1-2012 அன்று காலை விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலாளர்  பாலசிங்கம் அவர்களோடு, மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், தென்சென்னை மாவட்ட செய்தித் தொடர்பாளர் இர.செந்தில் ஆகியோர் 100க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகளுடன் படுகொலைக்குள்ளான சாந்தவேலுவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.  முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருந்தார்.

மக்கள் திரள் அதிகமாகவே காவல்துறை அதிகாரிகளும், கோட்டாட்சியரும்  பேச்சுவார்த்தை என்கிற பெயரில் சாந்தவேலுவை அடக்கம் செய்ய வற்புறுத்தினர்.  ஆனால், மலையாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சாந்தவேலுவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும், அத்துடன் கொலையாளிகளான மலையாளிகளையும், தமிழகத்திலிருந்து சாந்தவேலுவை அழைத்துச் சென்ற சந்திரசாமியையும் கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தமிழுணர்வாளர்கள் போராடினர். போராட்டக்குழுவின் கோரிக்கையை காவல்துறை வழக்கம்போலப் புறந்தள்ளியது.  இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, செய்வதறியாது திரும்பிய காவல்துறை, கூடிப் பேசி வழக்கமான சதி ஆலோசனையில் ஈடுபட்டது.

மாலை 3 மணியளவில் காக்கிச்சட்டைகள் பெரிய பெரிய லத்திகளுடன் திருவேங்கடம் பகுதியைச் சுற்றி வளைத்தது.  சாந்தவேலுவின் உடலைச் சுற்றி அமர்ந்திருந்த அனைத்துத் தோழர்களையும் கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னிஅரசு, பாலசிங்கம், இர.செந்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது.  அதே வேளையில் சாந்தவேலுவின் மனைவி, குழந்தைகளை நெட்டித் தள்ளிவிட்டு சாந்தவேலு உடலை அடக்கம் செய்ய எடுத்துப்போய், புதைக்காமல் எரியூட்டியது போலீஸ் கும்பல்.

முல்லைப் பெரியாறுச் சிக்கலில் இந்திய காங்கிரஸ் அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பதிலிருந்தே, இது மன்மோகன் சிங் அரசு அல்ல; மலையாளிகளின் அரசு என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.  இப்போது ஆள்கின்ற ஜெயலலிதா, இது ஜெயலலிதா அரசு அல்ல; உம்மன் சாண்டியின் அரசுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நாகரிக உலகில் சாந்தவேலுவின் உடலை ஒரு மரியாதையாக அடக்கம் செய்யக்கூட அனுமதிக்காத ஜெயலலிதாவின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டு நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை.  ஏனென்றால் பாம்பு எத்தனை முறை தோலை உரித்துப் போட்டுவிட்டு முன்பு மாதிரி நான் இல்லை என்று  சொன்னாலும், அதன் குணம் மாறுவதில்லை.  அதைப் போலத்தான் சண்டிராணி ஜெயலலிதாவும்.  சாந்தவேலு கொல்லப்பட்டதை அறிந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி நனைந்துபோன ஐம்பது ரூபாய் நோட்டை பாய்லரில் காய வைத்தபோது தவறுதலாக வெந்நீர் பட்டுவிட்டது என்று மலையாளிகளைக் காக்கும் வகையில் அறிக்கை விடுகிறார்.  ஆனால் ஜெயலலிதாவோ கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு ஓர் இரங்கல்  அறிக்கைகூடத் தெரிவிக்கவில்லை.  நட்ட ஈடு வழங்கவில்லை.  கேரளாவை ஆள்கின்ற காங்கிரஸ் அரசைக் கண்டிக்கக்கூட முன்வரவில்லை.  இதையெல்லாம் செய்யாவிட்டாலும்கூடப் பரவாயில்லை.  மரியாதையாக நல்லடக்கம் செய்யவாவது அனுமதித்திருக்கலாம். ஆனால், உம்மன்சாண்டியைவிட ஒருபடி மேலேபோய் சாந்தவேலுவின் உடலை இழுத்துப்போய்  அவசர அவசரமாக எரித்ததன் மூலம் இந்திய  இறையாண்மையையும் சேர்த்து எரித்திருக்கிறார்கள்.

எரிக்கப்பட்ட அந்தத் தீயில் இந்திய ஒற்றுமை தேசியக் கொடியாய்  கொழுந்துவிட்டுப் பறக்கிறது.  தமிழர்களின் மௌனத்தையும் இந்த நெருப்பு சுட்டுப்பொசுக்கட்டும்.

- வன்னி அரசு

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More