மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்ஒதுக்கீடு உடனே வேண்டும்!” - தொல்.திருமாவளவன் கோரிக்கை
தொல்.திருமாவளவன் கோரிக்கை
சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா கடந்த மார்ச் 8 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 1996ஆம் ஆண்டிலிருந்து மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் இம்மசோதாவை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெற இயலாத நிலையில் தேக்கமடைந்திருந்தது. தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குரிய உள்ஒதுக்கீட்டு சட்டப்படி உறுதிசெய்யப்பட வேண்டும் என்னும் ஞாயமான கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் காரணமாக இம்மசோதா நிறைவேற்றப்பட முடியாத நிலையிலிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அன்றைய பாராதிய சனதா அரசானாலும் சரி, இன்றைய காங்கிரஸ் அரசானாலும் சரி, தயக்கம் காட்டுவது ஏன் என்று விளங்கவில்லை.





